கோலாலம்பூர், டிசம்பர் 7 – தெற்கு காசாவில் உள்ள மருத்துவக் கிடங்கலிருந்து சுகாதாரப் பொருட்களை 24 மணி நேரத்தில் வேறு இடத்திற்கு மாற்றுமாறு உலக சுகாதார நிறுவனத்திற்கு உத்தரவிட்ட இஸ்ரேலின் நடவடிக்கைக்கு சுகாதார அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை முற்றிலும் மனிதாபிமானமற்றது என்பதோடு உலகம் இதனைக் கண்டிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா ஒரு அறிக்கையில் கூறினார்.
அத்தகைய உத்தரவை நிறைவேற்ற இஸ்ரேல் எடுத்துள்ள முடிவு பாலஸ்தீனியர்களின் மருத்துவ உரிமைகள் மற்றும் தேவைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் பாலஸ்தீனத்தில் அமைதிக்கான தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை மேலும் சிக்கலாக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த அநீதிக்கு எதிராக சர்வதேச சமூகம் குரல் கொடுக்கத் தவறியது பாலஸ்தீனியர்களை நடத்துவதில் உள்ள சமத்துவமின்மை நிவலவுவதைக் காட்டுகிறது என்றார் அவர்.
உலக அமைதிக்காக பாலஸ்தீனியர்களுக்கான நீதியை நிலைநாட்ட அனைத்து தரப்பினரையும் நான் வலியுறுத்துகிறேன் என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
தரைவழித் தாக்குதல் காரணமாக மருத்துவப் பொருள்களை அனுப்ப அனுமதி கிடையாது என இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து 24 மணி நேரத்தில் தெற்கு காசாவில் உள்ள அதன் மருத்துவக் கிடங்கிலிருந்து பொருட்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
கடந்த அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய படையினர் நடத்தி வரும் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் குறைந்தது 16,248 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 43,616 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
– பெர்னாமா