பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 7 – சூதாட்ட உபகரணங்கள், பிட்காயின் இயந்திரங்கள், கடத்தல் மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் உள்பட 12 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வழக்கு ஆதாரப் பொருட்களை சுபாங் ஜெயா போலீ[சார் அழித்தனர் .
மொத்தம் 179 விசாரணை அறிக்கைகளை உள்ளடக்கிய இந்த வழக்குகள் 2020 மற்றும் 2021 க்கு இடையில் முடிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு விட்டன என்று சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார் .
அழிக்கப்பட்டப் பொருள்களில் 744,600 வெள்ளி மதிப்புள்ள 1,078 கணினிகள், மடிக்கணினிகள், கைப்பேசிகள், சூதாட்டப் பொருட்கள் மற்றும் 27,807 வெள்ளி ரொக்கமும் அடங்கும் என அவர் தெரிவித்தார்.
கடத்தல் பொருட்களில் 1,479 மதுபான பாட்டில்கள் மற்றும் கேன்கள், பல்வேறு பிராண்டுகளைக் கொண்ட 1,863 கார்டன் சிகரெட்டுகள் ஆகியவையும் அடங்கும். பிட்காயின் வழக்குகளைப் பொறுத்தவரை 51,000 வெள்ளி மதிப்பிலான மொத்தம் 113 பிட்காயின் இயந்திரங்களும் அழிக்கப்பட்டன என நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இதற்கிடையில், கடந்த நவம்பர் 19ஆம் தேதியன்று ஜாலான் பிஜேஎஸ் 9/1 பண்டார் சன்வேயில் குழந்தை கைவிடப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த வான் அஸ்லான், இதன் தொடர்பில் விசாரணை நடந்து வருவதாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் சொன்னார்