ஈப்போ, டிச 16 – நேற்று செகோலா மெனெங்கா கெபாங்சான் (எஸ்எம்கே) ஜாதி மேருவின் அருகே 17 வயது மாணவன் ஒருவன் மரணமடைந்த விபத்தில் வாகனத்தை செலுத்தியதாக சந்தேகிக்கப்படும் மூத்த போலீஸ் அதிகாரி இன்று முதல் மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட 44 வயது போலீஸ்காரருக்கு எதிரான விசாரணையில் அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஃபரா நபிஹா முஹமட் டான் உத்தரவை பிறப்பித்ததாக ஈப்போ மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி யஹாயா ஹாசன் தெரிவித்தார்.
நேற்று, யஹாயா ஒரு அறிக்கையில், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் காவல்துறை அதிகாரி விசாரிக்கப்படுவார் என்று கூறினார்.
சந்தேக நபர் ஓட்டிச் சென்ற Perodua Ativa காரும், 17 வயது மாணவன் ஓட்டிச் சென்ற யமஹா மோட்டார் சைக்கிளும் மதியம் 12.40 மணி அளவில் விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
“மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், கார் ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை,” என்று அவர் கூறினார்.
இந்த விபத்து குறித்த வைரலான ஃபேஸ்புக் பதிவில் படிவம் ஐந்து மாணவன் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கார் மோதியது. வாகன சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், இங்குள்ள ஜாலான் பங்லிமா புக்கிட் கந்தாங் வஹாப்பில் உள்ள ஈப்போ செஷன்ஸ்/மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அடுத்த பகுதியில் ‘ இறந்த முஹம்மது ஜஹாரிஃப் அஃபெண்டிக்கு நீதி வேண்டும் ’ என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப் பட்டுள்ளதாக பெர்னாமா அறிகிறது.
– பெர்னாமா