ECONOMYMEDIA STATEMENT

மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் பலி- குழந்தை உள்பட ஐவர்  காயம்

ஷா ஆலம், டிச 22- கிள்ளான், பண்டார் பாரு, பெர்சியாரான் சுல்தான் இப்ராஹிமில் இன்று அதிகாலை நிகழ்ந்த மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததோடு குழந்தை உள்பட ஐவர் காயங்களுக்குள்ளாயினர்.

பெரேடுவா பெஸா, ஹொண்டா சிட்டி மற்றும் டோயோட்டா கேம்ரி ஆகிய கார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து தொடர்பில் இன்று அதிகாலை 6.23 மணியளவில் தாங்கள் தகவலைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்ஹிலிஸ் மொக்தார் கூறினார்.

மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக சுங்கை பினாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய ஐவர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

இந்த விபத்தின்  தாக்கத்தால் காரிலிருந்து தூக்கியெறியப்பட்டு கால்வாயில் விழுந்ததாக நம்பப்படும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை சுகாதாரப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விபத்தில் காயங்களுக்குள்ளான ஒரு குழந்தை, இரு சிறுமிகள் மற்றும் இரு பெரியவர்கள் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் இறந்தவர்களின் உடல்கள் சவபரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன என்றார் அவர்


Pengarang :