MEDIA STATEMENTNATIONAL

ஆடவர் உடல் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட விவகாரம்-  விசாரணைக்காக ஐவர் தடுத்து வைப்பு

கோலாலம்பூர், டிச 26- காதலியின் மூத்த சகோததருடன் ஏற்பட்ட கைகலப்பின் போது ஆடவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்காக மேலும் ஐவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ரவாங், சுங்கை சோவில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 19 முதல் 35 வயது வரையிலான மூன்று ஆண்கள் மற்றும் இரு பெண்களை தாங்கள் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளதாக கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் நோர் அரிபின் முகமது நாசீர் கூறினார்.

அவர்கள் அனைவரும் மூன்று வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை 4.40 மணியளவில் டேசா அமான் புரியில் ஒரு ஆடவர் மற்றும் இரு பெண்கள் கைது செய்யப்பட்ட வேளையில் மாலை 6.15 மணியளவில் பண்டார் புஞ்சா ஆலமில் உள்ள ஆலம் ஜெயா வர்த்தக மையத்தில்  மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

ஐந்தாவது நபர் சுங்கை சோவில் இரவு 11.00 மணியளவில் தடுத்து வைக்கப்பட்டார். குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைக்காக அவர்கள் அனைவரும் நேற்று தொடங்கி ஒரு வார காலத்திற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

இறந்த நபர் மீதான சவப்பரிசோதனை நேற்று முடிந்த நிலையில் அவரின் தலை மற்றும் உடலின் பல பாகங்களில் வீக்கமும் காயங்களும் இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இறந்த நபரின் காதலிக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனக் கூறிய நோர் அரிபின், காதலியின் நிர்வாணப் படம் தொடர்பான காணொளி இந்த சம்பவத்திற்கு காரணம்  எனக் கூறப்படுவது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :