ஷா ஆலம், ஜன 1- இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்பாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பழுதுடைந்த கால்வாய்களைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை கோத்த கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் முன்னெடுத்துள்ளார்.
ஸ்ரீ மூடா ‘ஏ‘ மண்டல குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவர் டி.மோகன் மற்றும் குடியிருப்பாளர்களுடன் நேற்று ஜாலான் 25/36 மற்றும் ஜாலான் 25/37 சாலைகளில் உள்ள கால்வாய்களை பிரகாஷ் மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் ஆகியோர் நேரில் சென்று கண்டார்.
அப்பகுதியிலுள்ள கால்வாய்கள் உடைந்துள்ளதோடு முறையான நீரோட்ட வசதியும் இல்லாத காரணத்தால் கனத்த மழை பெய்யும் சமயங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதாக மோகன் தெரிவித்தார்.
இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணும் விதமாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் பொறியியல் பிரிவிடம் இவ்விவகாரத்தை கொண்டுச் செல்வதாக பிரகாஷ் கூறினார்.
ஸ்ரீ மூடா வட்டாரத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் மற்றும் 2024ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் குறித்து குடியிருப்பாளர் சங்கப் பொறுப்பாளர்களிடம் அவர் எடுத்துரைத்தார்.
வெள்ளத்தை தடுப்பதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளை முறையாகப் பராமரிப்பதில் பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்குவதை குடியிருப்பாளர் சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.