NATIONAL

பேங்காக்கில் மலேசிய தூதரக அதிகாரி மரணம்

பேங்காங், ஜன 3 – பேங்காக்கில் உள்ள மலேசியத் தூதரகத்தில்
அமைச்சரின் ஆலோசகராகப் (பொருளாதார விவகாரங்கள்)
பணியாற்றி வந்த ஃபாட்சிலா அபு ஹசான் என்ற அதிகாரி நேற்று
காலமானார்.

பேங்காக்கில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த
அந்த 46 வயது அதிகாரி உள்ளுர் நேரப்படி அதிகாலை 6.00 மணிக்கு
உயிரிழந்தார். கடந்த 2022 டிசம்பர் முதல் அவர் இங்குள்ள மலேசிய
தூதரகத்தில் பணியாற்றி வந்தார்.

ஃபாட்சிலாவின் உடலை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை
மலேசியத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது. அவரது நல்லுடல் இன்று
மாலை 5.30 மணிக்கு காஜாங், சுங்கை மேராப், கம்போங் லிமாவ்
மானிஸ் மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

மறைந்த ஃபாட்சிலாவுக்கு 18 மற்றும் 15 வயதில் இரு பிள்ளைகள்
உள்ளனர். இதனிடையே, அன்னாரின் மறைவு தங்களுக்குப் பேரிழப்பாகும்
என்று தாய்லாந்துக்கான மலேசியத் தூதர் டத்தோ ஜோஜி சாமுவேல்
கூறினார்.


Pengarang :