செய்தி ;சு.சுப்பையா
ஷா ஆலம்.ஜன.5- கம்போங் பூங்கா ராயா நீண்ட வீட்டு பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண குடியிருப்புவாசிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கோத்தா டாமன்சார சட்டமன்ற உறுப்பினர் இசுவான் காசிம் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலம் தனியாருக்கு சொந்தமானது, நில உரிமையாளர் நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளார் ஆகையால் விரைவில் குடியிருப்பாளர்களை மாற்று இடத்தில் குடியமர்த்த வேண்டும்.
அதற்கு கம்போங் பூங்கா ராயா மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இன்று அனைத்து தரப்பினருடன் சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு அலுவலகத்தில் சிறப்பு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இசூவான் காசிம் இவ்வாறு தெரிவித்தார்.
30 ஆண்டு கால இப்பிரச்னைக்கு விரைந்து நல்ல தீர்வு காண சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அனைத்து ஒத்துழைப்பையும் தர தயாராக இருக்கிறேன். சிலாங்கூர் மாநில அரசும் தயாராக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்