கோலாலம்பூர், ஜன 12- கிள்ளான் பள்ளத்தாக்கியுள்ள ஏழு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் முறையான வேலை பெர்மிட் இன்றி பாதுகாவலர்களாகப் பணிபுரிந்த 10 வெளிநாட்டவர்களை உள்துறை அமைச்சு கைது செய்தது
கடந்த புதன் கிழமை குடிநுழைவு துறையுடன் இணைந்து அமலாக்க மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்ட உள்துறை அமைச்சின் அமலாக்க மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவுச் செயலாளர் நிக் யுஸாமி யூசுப் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பாதுகாவலர்கள் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை மற்றும் நேப்பாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய நான்கு பாதுகாப்பு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதற்காக இதன் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. உரிமம் ரத்து செய்யப்படுவது உள்பட கடுமைமான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட பாதுகாவலர் நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்படலாம் என்றார் அவர்.
இந்த சம்பவம் தொடர்பில் 1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 39(b) பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது. இச்சட்ட விதிகளின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 10,000 வெள்ளிக்கும் மிகாத அபராதம் அல்லது ஆறு மாதம் வயையிலான சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.