ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நான்கு ஏஹ்சான் மார்ட் கிளைகளில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜன 14- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் நான்கு ஏஹ்சான் மார்ட் கிளைகளில் மலிவான விலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.

விஸ்மா பி.கே.பி.எஸ். (செக்சன் 14, ஷா ஆலம்), அவுட்லெட் ஏஹ்சான் பி.கே.பி.எஸ். ( செக்சன் 9 ஷா ஆலம்), அவுட்லெட் ஏஹ்சான் பி.கே.பி.எஸ். (மேரு) மற்றும் கியோஸ்க் ஏஹ்சான் ( சிலாங்கூர் புரூட் வேலி) ஆகிய இடங்களில் இந்த மலிவு விற்பனை நடைபெறும் என சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் கூறியது.

ஏஹ்சான் மார்ட் கடைகளில் 300க்கும் மேற்பட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வேளையில் அவற்றில் 42 பொருள்கள் ஏஹ்சான் முத்திரையைக் கொண்டவையாகும் என்று அது தெரிவித்தது.

சிலாங்கூர் மாநில ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை நாளை தொடங்கி மாநிலம் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

ஏஹ்சான்  ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS  என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும்  அறிந்து கொள்ளலாம்.


Pengarang :