ஷா ஆலம், ஜன 15- இவ்வாண்டில் 53 கோடி வெள்ளியை வரித் தொகையாக வசூலிக்க ஷா ஆலம் மாநகர் மன்றம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக மாநகர் மன்றத்தின் இடைக்கால டத்தோ பண்டார் கூறினார்.
கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக அதாவது 50 கோடியே
50 லட்சம் வெள்ளி வரி வசூலிக்கப்பட்டதாகவும் மதிப்பீட்டு வரி மற்றும்
இதர வரிகளும் இதில் அடங்கும் என்றும் செரேமி தர்மான் தெரிவித்தார்.
கடந்தாண்டில் இலக்கைத் தாண்டி கூடுதலாக வரி வசூலிக்கப்பட்டது. 93
விழுக்காட்டுத் தொகையை அதாவது 31 கோடி வெள்ளியை நாம் வசூல்
செய்தோம் என அவர் குறிப்பிட்டார்.
சொத்து உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வரியைச்
செலுத்தி விடுவர் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் விரைவாக
செலுத்துவோருக்கு பல பரிசுப் பொருள்கள் காத்திருக்கின்றன என்று அவர்
தெரிவித்தார்.
நேற்று இங்கு நடைபெற்ற ஷா ஆலம் வாகனமில்லா தின நிகழ்வைத்
தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக்
கூறினார்.
மக்களின் வசதிக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை
மாநகர் மன்றம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் என்றும் செரேமி
குறிப்பிட்டார்.
ஷா ஆலம் மாநகர் மன்றம் அடுத்தாண்டு வெள்ளி விழாவைக்
கொண்டாடவுள்ளது. ஆகவே பொது வசதிகளை தரம் உயர்த்தும்
பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவிருக்கிறோம் என அவர் சொன்னார்.
அடிப்படை வசதிகள் மற்றும் சாலைகளை சீரமைப்பது தவிர்த்து
போக்குவரத்து முறை மேம்படுத்துவதிலும் நிலவடிவமைப்பு பணிகளிலும்
கவனம் செலுத்தவிருக்கிறோம் என்றார் அவர்.