கேமரன் ஹைலண்ட்ஸ், ஜன 26- இங்குள்ள புளுவேலி பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில் ஒருவரது சடலம் இன்று காலை 11.05 மணியளவில் மீட்கப்பட்டது.
மியன்மார் பிரஜையின் அந்த உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கனி கூறினார்.
இச்சம்பவத்தில் புதையுண்டதாக நம்பப்படும் மேலும் நால்வரை தேடி மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட பகுதி மிகவும் ஆபத்து நிறைந்தாக உள்ளது. ஆகவே, பாதுகாப்பு கருதி நாங்கள் செய்தியாளர்களை அனுமதிக்கவில்லை. இந்த சம்பவத்தில் உயிரிழந்த அனைவரும் அந்நிய பிரஜைகளாவர் என்று அவர் தெரிவித்தார்.
இன்று விடியற்காலை 2.51 மணியளவில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் நால்வர் மண்ணில் புதையுண்டனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் 25 முதல் 56 வயது வரையிலான மியன்மார் பிரஜைகள் என்று கேமரன் ஹைலண்ட்ஸ் மாவட்ட பேரிட மேலாண்மை செயலகம் கூறியது.