கோலாலம்பூர், ஜன 26 – பொதுச் சேவை ஊதியத் திட்டத்தை மறுஆய்வு செய்த பிறகு எடுக்கப்படும் எந்த முடிவும் நாட்டிலிலுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும் பொருந்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த பரிந்துரைக்கு தாம் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார்.
இருப்பினும், பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் கூட்டரசு அரசியலமைப்பின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய விரிவான ஆய்வுகளுக்குப் பின்னரே இந்த விவகாரம் அமைச்சரவையால் இறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.
அரசு ஊழியர்களுக்காக எடுக்கும் எந்த முடிவும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். வரும் 2024 பிப்ரவரி 1 முதல் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் அல்லாத நியமனத்தை நாங்கள் தொடங்கவிருக்கிறோம். அதுவே அனைத்து அரசியல் நியமனங்களுக்கும் பொருந்தும் என்றார் அவர்.
இன்று இங்குள்ள பெலித்தா நாசி கண்டார் உணவகத்தில் மதிய உணவை எடுத்துக்கொள்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
அரசியல்வாதிகள், குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பொதுச் சேவைத் துறை ஊழியர்கள் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் அரசாங்கத்தை வலியுறுத்தியது.
சராசரியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் அரசு ஊழியர்களுடன் ஒப்பிடும்போது சுமார் ஐந்து ஆண்டுகள் மட்டுமே அரசியல்வாதிகள் பணியாற்றுவதால், அவர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் முதலில் பரிசீலிக்க வேண்டும் எனறு அதன் தலைவர் டத்தோ அட்னான் மாட் கூறியிருந்தார்.
இதற்கிடையில், தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாவிட்டால் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்த முடியாது என்பதை எந்த அரசாங்கமும் உணரும் என்று அன்வார் தெரிவித்தார்.
ஆகவே, முதலில் பரிந்துரையைக் கேட்போம். பின்னர் அதை ஆராய்ந்து அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தேவையான கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைப்போம். பின்னர் அதை இறுதி செய்வோம் என்று அவர் கூறினார்.