ஜோகூர் பாரு, பிப் 11 – பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவரை மிரட்டி 35,000 வெள்ளியைப் பெற்றது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த இரண்டு போலீசார் இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இப்புகார் தொடர்பான விசாரணை தொடரும் நிலையில் ஸ்ரீ ஆலம் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 29 மற்றும் 37 வயதுடைய இரு போலீஸ்கார்களும் இன்று விடுவிக்கப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் எம். குமார் தெரிவித்தார்.
விசாரணை முடிந்ததும் விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
கடந்த புதன் கிழமை முதல் இந்த வழக்கின் விசாரணையில் உதவுவதற்காக கடந்த புதன் கிழமை முதல் காவலில் வைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் அந்தஸ்து கொண்ட ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த ஏழு போலீசார் வெள்ளிக்கிழமை போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக குமார் மேலும் சொன்னார். குற்றவியல் சட்டத்தின் 384 பிரிவின் கீழ் மேலும் விசாரணை நடத்தப்படுகிறது என்றார் அவர்.
மிரட்டிப் பணம் பறித்தது தொடர்பில் மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த போலீஸ்காரர்களுக்கு எதிராக கடந்த திங்கள் கிழமை ஜோகூர் போலீசார் புகாரைப் பெற்றனர்.