பெத்தோங், பிப் 12- ஜாலான் உலு லாயார், பத்து லிந்தாங் ரூமா பாஞ்சாங் குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இரு பதின்ம வயது இளைஞர்கள் நீரில் மூழ்கி மாண்டனர்.
நோர்மான் ஷக்கிமி சூரியா அரிபின் (வயது 16) மற்றும் அஃபிக் அய்மான் முகமது அட்ரஸ் (வயது 17) ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர் என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு தாங்கள் விரைந்த போது நோர்மான் ஷக்கிமி சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதாகக் கூறிய அவர், அவ்வாடவர் உயிரிழந்து விட்டதை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்றார்.
பெத்தோங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த முக்குளிப்பாளர்கள் ஆற்றின் அடிப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். சுமார் 15 நிமிட தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர் அஃபிக் அய்மானின் உடல் நேற்று மாலை 6.44 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அவ்விரு இளைஞர்களும் அந்த ரூமா பாஞ்சாங் குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள ஆற்றில் சக நண்பர்களோடு குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கியதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் கூறினர் என்றார் அவர்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 3.53 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பெத்தோங் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என அவர் சொன்னார்.
மீட்கப்பட்ட அவ்விரு இளைஞர்களின் உடல்களும் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த மீட்புப் பணி இரவு 7.04 மணியளவில் முடிவுக்கு வந்தது என்றார் அவர்.