கோலாலம்பூர், பிப் 12- சீனப் புத்தாண்டு விடுமுறை முடிந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்குவதால் நாட்டின் சில முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
இன்று பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி பேராக் மாநிலத்தின் கோப்பேங்கிலிருந்து தாப்பா வரையிலும், கோல கங்சாரிலிருந்து மெனோரா சுரங்கப்பாதை வரையிலும் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தில் போக்குவரத்து மெதுவாக காணப்படுவதாக
மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் (எல்.எல்.எம்.) பேச்சாளர் கூறினார்.
மேலும், மலாக்கா மாநிலத்தின் ஆயர் குரோவிலிருந்து சிம்பாங் அம்பாட் வரையிலான வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது என்று அவர் சொன்னார்.
கிழக்கு கரையை பொறுத்த வரை கோம்பாக் டோல் சாவடியில் நுழைவதற்கு முன்பு பகாங்கின் பெந்தோங் தீமோரிலிருந்து புக்கிட் திங்கி மற்றும் கெந்திங் செம்பா வரை வாகனங்கள் மெதுவாக நகர்வதாக எல்.எல்.எம். தெரிவித்தது.
கோம்பாக் டோல் சாவடியின் இரு திசைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது என்று அது கூறியது.