கோலாலம்பூர், பிப் 12- சீனப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்ட 21வது ‘ஒப் செலாமாட்’ சாலை பாதுகாப்பு இயக்கத்தின் முதல் நான்கு நாட்களில் பதினான்கு மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அக்காலக் கட்டத்தில் 1,480 வாகனங்கள் சம்பந்தப்பட்ட 1,203 விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது.
இவ்வாண்டிற்கான ஓப் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கம் ‘பாதுகாப்பான வீடு, பாதுகாப்பான பயணம்” ‘ என்ற கருப்பொருளை கொண்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் முன்னதாகக் கூறியிருந்தார்.
சாலை விபத்துக்களைக் குறைப்பது, சீரான போக்குவரத்தை உறுதி செய்வது மற்றும் பண்டிகைக் காலங்களில் திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பது ஆகியவை இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களாகும் என அவர் தெரிவித்திருந்தார்.