ECONOMYMEDIA STATEMENT

இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் முதியவர் மரணம்- தம்பினில் சம்பவம்

சிரம்பான், பிப் 14- இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஐவர் காயங்களுக்குள்ளாயினர். இந்த விபத்து தம்பின், ஆயர் கூனிங் நோக்கிச் செல்லும் ஜாலான் சுங்கை டுவா சாலையின் 1வது கிலோ மீட்டரில் சுங்கை டுவா பள்ளிவாசல் அருகே நேற்றிரவு 11.00 மணியளவில்  நிகழ்ந்தது.

உடலில் ஏற்பட்ட பலத்தக் காயங்கள் காரணமாக 65 வயதான அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அமிருடின் ஷரிமான் கூறினார்.

அந்த முதியவர் உள்பட நால்வர் பயணம் செய்த ஹோண்டா சிட்டி கார் தங்காக்கிலிருந்து ரொம்பின் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்தடத்தில் நுழைந்து எதிரே இரு பயணிகளுடன் ஆடவர் ஒருவர் ஓட்டி வந்த லெக்சஸ் ரக வாகனத்துடன் மோதியது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த விபத்தின் காரணமாக அவ்விரு கார்களிலும் இருந்த ஐந்து பயணிகள் காயங்களுக்குள்ளான வேளையில் ஒருவர் காயமின்றித் தப்பினார். காயமுற்றவர்களில் இருவர் கோல பிலா துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த விபத்தில் உயிரிழந்த முதியவரின் சடலம் சவப்பரிசோதனைக்காக தம்பின் மருத்துவமனையின் தடயவில் பிரிவுக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக க் கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :