NATIONAL

நோன்புப் பெருநாளை முன்னிட்டு நிலையான விலையில் 22,000 பயண இருக்கைகள்- ஏர் ஆசியா வழங்குகிறது

கோலாலம்பூர், மார்ச் 5 – நோன்புப் பெருநாளை முன்னிட்டு தீபகற்ப
மலேசியாவுக்குக் கிழக்கு மலேசியாவுக்கும் இடையிலான இரவு நேரப்
பயணங்களுக்காக நிலையான விலையிலான 22,000 மேற்பட்ட பயண
இருக்கைளை ஏர் ஆசியா ஏற்பாடு செய்துள்ளது.

பெருநாளை குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக பொது மக்கள்
சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தரும்
நோக்கில் இச்சேவை வழங்கப்படுவதாக அந்த குறைந்த கட்டண
விமான நிறுவனம் கூறியது.

பயணிகள் வரும் ஏப்ரல் 5 முதல் 17 வரை கோலாலம்பூரிலிருந்து
கூச்சிங், சிபு, பிந்துலு மற்றும் மிரிக்கும் ஜோகூர் பாருவிலிருந்து கூச்சிங்,
சிபு அல்லது மிரி ஆகிய நகரங்களுக்கும் 298 வெள்ளி ஒருவழிப் பயணக்
கட்டணத்தில் பயணிக்க முடியும்.

அதே சமயம், கோலாலம்பூரிலிருந்து கோத்தா கினபாலு, சண்டகான்,
மற்றும் ஜோகூர் பாருவிலிருந்து கோத்தா கினாபாலுவுக்கு 348 வெள்ளி
ஒரு வழிப்பயணக் கட்டணத்தில் பயணிக்க முடியும் என அது அறிக்கை
ஒன்றில் தெரிவித்தது.

இந்த சிறப்புக் கட்டண பயணத் திட்டத்திற்கான முன்பதிவுகளை இப்போது
தொடங்கி எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்.

தீபகற்ப மலேசியாவுக்கும் கிழக்கு மலேசியாவுக்கும் இடையே 11 பயணத்
தடங்களுக்கான 122 இரவு நேரப் பயணச் சேவை தவிர்த்து அரசாங்கத்தின்
பெருநாள் கால முயற்சிகளுக்கு உதவும் நோக்கில் வழக்கமான
கட்டணத்தில் வாரம் 735 பயணச் சேவைகளை தாங்கள் வழங்கி
வருவதாகவும் ஏர் ஆசியா கூறியது.

இந்த சிறப்பு பயணச் சேவை கட்டுபடி விலையிலானது மட்டுமின்றி
அரசாங்கத்தின் பெருநாள் கால சிறப்பு கட்டணத் திட்டத்திற்கு உதவுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது என்று ஏர் ஆசியா ஏவியேஷன் குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி போ லிங்கம் கூறினார்.


Pengarang :