ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சாலை விபத்தில் தந்தை, நான்கு வயது மகள் பலி

கோத்தா கினாபாலு, மார்ச் 24- கெனிங்காவ்,  ஜாலான் அபின்-அபின் எனுமிடத்தில் நேற்றிரவு நிகழ்ந்த   எம்.பி.வி. எனப்படும் பல்வகைப் பயன் வாகனம்  மற்றும் நான்கு சக்கர இயக்க வாகனம் சம்பந்தப்பட்ட  விபத்தில் தந்தையும் அவரது நான்கு வயது மகளும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில்  உயிரிழந்தவர்கள் மாசினோ கெலாங் (வயது 45) மற்றும் கிளாரினா மெக்டில்டிஸ் மசினோ (வயது 4) என அடையாளம் காணப்பட்டதாக  சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கை மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த விபத்து தொடர்பில்  நள்ளிரவு 12.22 மணிக்கு  தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததைத்  தொடர்ந்து கெனிங்காவ் தீயணைப்பு மற்றும் மீட்பு மையத்தைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் அடங்கிய குழு  சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

இவ்விபத்தில் உயிரிழந்த  நபரின்  33 வயது மனைவி மற்றும் 2 முதல் 11 வயதுடைய நான்கு குழந்தைகள் பலத்த காயங்களுக்கு உள்ளான வேளையில்  நான்கு சக்கர இயக்க வாகனத்திலிருந்த  31 முதல் 40 வயதுடைய மூன்று பெரியவர்களுக்கு சொற்பக் காயங்கள் மட்டுமே ஏற்பட்டன என்றார் அவர்.

தந்தையும் மகளும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர் செய்தியாளர்கள் தொடர்பு கொண்ட போது கூறினார்.

இந்த விபத்துக்கான  காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சமபவ இடத்தில் மீட்புப் பணிகள் அதிகாலை 2.30 மணியளவில் முடிவுக்கு வந்தன  என்று அவர் கூறினார்.


Pengarang :