ஷா ஆலம், ஏப் 10: கிள்ளான், பத்து 9, ஜாலான் கெரெதாப்பி லாமாவில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்டத் தீவிபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த வேளையில் அவரது தம்பி தெய்வாதீனமாக உயிர் பிழைத்தார்.
இந்த தீவிபத்து தொடர்பில் நேற்றிரவு 10.26 மணிக்கு தமது துறைக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
அவ்வீட்டில் ஏற்பட்டத் தீ இரவு 11.23 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் மரக் குவியலுக்கு அடியில் 79 வயது முதியவரின் சடலம் கிடப்பதை மீட்புப் பணியாளர்கள் கண்டு பிடித்தனர் என்று அவர் சொன்னார்.
அவ்வீடு 90 விழுக்காடு தீயில் அழிந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீட்டிலிருந்த மேலும் ஒரு முதியவர் பொதுமக்களால் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வரப்பட்டார். அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று முக்லிஸ் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கப்பார், சுங்கை பினாங் மற்றும் கோத்தா ராஜா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் தீயை 20 நிமிடங்களில் கட்டுப்படுத்தியதாக அவர் கூறினார்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது.