ஷா ஆலம், ஏப் 10- கிள்ளான், ஜாலான் கிளாங் உத்தாமாவில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.
டிரெய்லர் லோரி ஓன்றுடன் அப்பெண் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மோதியது. தடுமாறி சாலையில் விழுந்த அவர் லோரியின் சக்கரத்தில் சிக்கி சுமார் ஆறு மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.
இந்த விபத்து கிளாங் உத்தாமாவில் குளிர்பான தொழிற்சாலைக்கு அருகே நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முகமது கூறினார்.
இச்சம்பவம் நிகழ்ந்த போது அந்த 19 வயது இளம் பெண் யமஹா எஸ்எஸ்110 மோட்டார் சைக்கிளில் காப்பாரிலிருந்து கிள்ளான் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது உறுதி செய்யப்பட்டது. மீட்பு பணிக்காக வட கிள்ளான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.