துபாய் ஏப் 17- மோசமான வானிலை காரணமாக துபாய் அனைத்துலக விமான நிலையம் குறிப்பிடத்தக்க இடையூறுகளை சந்தித்து வருவதாகவும் கூடிய விரைவில் சேவைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் விமான நிலைய நிர்வாகம் கூறியது.
வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஊழியர்களால் விமானங்கள் தாமதமாகின அல்லது திசை திருப்பப்பட்டன. சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்ப சிறிது காலம் பிடிக்கும் என்று விமான நிலைய நிர்வாகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
மோசமான வானிலை மற்றும் சாலை நிலைமையினால் ஏற்பட்ட செயலாக்க சவால்கள் காரணமாகப் புதன்கிழமை காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளுக்கான செக்-இன் பணிகள் இடைநிறுத்தம் செய்யப்படுவதாக துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனம் கூறியது.
நேற்று மாலை வீசிய புயல் காரணமாக துபாய் அனைத்துலக விமான நிலையம் விமானங்களைத் தற்காலிகமாகத் திசைதிருப்பியது. மேலும் அனைத்து நடவடிக்கைகளும் 25 நிமிடங்களுக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டன.