ஷா ஆலம்,ஏப்-29 தற்போது ஊடகங்களில் தோட்டப்புற தொழிலாளர்கள் (லாடாங் மேரி, லாடாங் சுங்கை திங்கி, லாடாங் நைக்கல் கார்டென், லாடாங் மிஞ்யாக் மற்றும் லாடாங் புக்கிட் திங்கி) ஆகிய ஐந்து தோட்டத்தினர் கொடுத்த நேர்காணலைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்.
காரணம் கடந்த ஆண்டு எனக்குக் கிடைத்த தகவலின்படி இந்த ஐந்து தோட்ட மக்களும் குடியிருப்பு வசதியின்றி கஷ்டப்படுகின்றனர் என்பதினை மாண்புமிகு நூருல் ஷஸ்வானி பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் மூலம் தெரிந்துகொண்டேன்.
அதை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகத்திற்கும் மாநில மற்றும் மத்திய அமைச்சுக்கும், அதிகாரபூர்வ கடிதங்கள் மூலம் ஒரு சந்திப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தேன்.
அச்சந்திப்பு கடந்த 13.2.2024 அன்று எனது சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பல கட்சிகளைச் சார்ந்த பிரநிதிகளும் தோட்டப்புற மக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க முன்வந்தனர்.
இருப்பினும், இக் கலந்துரையாடல் தோட்டப்புற பிரதிநிதிகளுடன் மட்டுமே நான் மேற்கொண்டேன். அதற்காக என்னை எதிர்த்து சில காணொளிகள் வெளி வருவதைக் கேள்விப்படும் போது நான் வேதனை அடைந்தேன்.
”அச்சம் தவிர் நெஞ்சம் நிமிர்” என்பதற்கேற்ப எதற்கும் அஞ்சாமல் இந்நாட்டிற்கு எனது சேவையை மேலும் தொடருவேன், இந்நாட்டு இந்தியர்களின் பிரச்சனைகளை எதிர்கொள்ள அஸ்திவாரமாக இருப்பேன், என உறுதியளிக்கிறேன்.
மேலும், வீடமைப்பு ஊராட்சி அமைச்சகம் (கே.பி.கே.தி) சமீபத்திய நிலை மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பிறகு அடுத்த தொடர் நடவடிக்கையைக் கேட்டுக் கடிதம் அனுப்பியுள்ளோம்.
தொடர்ந்து, பெர்ஜெயா வீடமைப்பு மேம்பாட்டாளர் இத்தோட்டங்களுக்கு 20 ஏக்கர் நிலம் தருவதாக கூறியுள்ளனர். இவ்வேளையில், பெர்ஜெயா வீடமைப்பு மேம்பாட்டாளருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக, இம்மக்களுக்கு உதவும் எல்லா தரப்பினருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் மாண்புமிகு வீ.பாப்பா ராய்டு தெரிவித்தார்.