ஜோகூர் பாரு, மே 1- வேலை வாய்ப்பு மோசடி மற்றும் போலி முதலீட்டுத் திட்டத்தில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 11 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஜோகூர் பாரு மாநகரில் உள்ள இரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 28 முதல் 45 வயது வரையிலான ஒரு பெண் உள்ளிட்ட ஒன்பது அந்நியப் பிரஜைகளும் இரு உள்நாட்டினரும் அடங்குவர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் சி.பி. எம். குமார் கூறினார்.
நேற்று மாலை 6.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில் 41 கைபேசிகள், ஆறு கணினிகள், மூன்று ஏ.டி.எம். கார்டுகளும் கைப்பற்றப்பட்டதாக அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
வெளிநாட்டினரை இலக்காகக் கொண்ட இக்கும்பல் தங்களின் மோசடி நடவடிக்கைக்கு பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வந்துள்ளது என்று அவர் சொன்னார்.
இக்கும்பல் கட்டணங்களைச் செலுத்துவதற்கு இக்கும்பல் கிரிப்டோ கரன்சியைப் பயன்படுத்தி வந்துள்ளதோடு வெளிநாட்டு கைபேசிகளுக்கான இணைப்பையும் விற்பனை செய்து வந்துள்ளது. இந்த கும்பலுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.