செய்தி ; சு.சுப்பையா
பாத்தாங் காலி. மே.7- நாட்டில் சிறந்த மாநிலம் சிலாங்கூர். சிறந்த மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி. ஆளுங் கட்சியின் சார்பில் போட்டியிடும் நமது வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று ஜ.செ.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞரும் டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.
கோலக் குபு பாரு இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பாத்தாங் காலி, புக்கிட் சண்டான் புதுக் கிராமத்தில் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் இடைத்தேர்தல் ஹராப்பான் வேட்பாளர் புவான் பாங், லிம் குவான் எங், ஙா கோர் மிங், ஸ்டிவன் சிம், தான் கொக் வாய், பாப்பா ராய்டு மற்றும் ஜ.செ.க.வின் பல தலைவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் இந்திய வாக்காளர்களும் அடங்குவர்.
ஆளும் கட்சியின் பலத்தைத் தொடர்ந்து நிலை நாட்ட வேண்டும். மந்திரி புசாரின் கரத்தையும் வலு படுத்த வேண்டும். நாட்டில் உள்ள மந்திரி புசார் களில் சிறந்த ஆற்றல் உடையவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி. அவரின் அயராத உழைப்பால் சிலாங்கூர் மாநிலம் துரித மேம்பாடு அடைந்து வருகிறது.
இந்த மேம்பாட்டில் கோலக் குபு பாரு விடு பட்டு விடக் கூடாது. கோலக் குபு பாருவின் மேம் பாட்டைத் தொடர நமது வேட்பாளர் புவான் பாங்கிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கோபிந் கேட்டுக் கொண்டார்.
கடந்த 2 தவணைக்கு மேல் அமரர் லி கீ ஹியோங் இத்தொகுதியில் சிறப்பாக சேவையாற்றியுள்ளார். அவரது சேவையை தொடரப் புவான் பாங்கிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று இந்தப் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்திருந்த வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.
இந்த இடைத் தேர்தலில் நமது வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே கோலக் குபு மக்கள் பிளவுபடாத ஆதரவைக் கொடுக்க வேண்டும். வலுவான மாநில அரசுக்கு இத்தொகுதி மக்கள் கடந்த காலத்தைப் போலத் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இரவு 7.30 மணிக்கு விருந்துடன் கூடிய இடைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் தொடங்கியது. இரவு 10.00 மேல் இந்தப் பிரச்சாரக் கூட்டம் நிறைவு பெற்றது. இக்கூட்டத்தை உலு சிலாங்கூரில் உள்ள கிம்லான் என்ற கிலாப் ஏற்பாடு செய்தது. கோலக் குபு பாரு சட்ட மன்றத்தில் 9 க்கும் மேற்பட்ட புதுக் கிராமங்கள் உள்ளன. இந்தப் புதுக் கிராமங்கள் யாவும் ஜ.செ.க. வின் கோட்டையாக திகழ்கிறது.
இந்தக் கோட்டைக்குள் பாஸ் கட்சியும் பெர்சத்து கட்சியும் ஊடுருவ முடியாது என்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோலக் குபு பாருவின் முன்னாள் இந்தியச் சமுகத் தலைவர் பாலா கூறினார்.