NATIONAL

கால்பந்தாட்ட வீரர்களுக்கு எதிராகத் தொடரும் தாக்குதல்கள்- ஜோகூர் விளையாட்டாளரின் கார் கண்ணாடி உடைப்பு

ஜோகூர் பாரு, மே 8 – ஜோகூர் தாக்ஸிம் குழுவின் (ஜே.டி.டி.) விளையாட்டாளரான ஷாபிக் ரஹிமின் கார் கண்ணாடி அடையாள தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டது. இச்சம்பவம் இங்குள்ள ஜாலான் ஸ்ரீ கெலாங்கில் நேற்றிரவு நிகழ்ந்தது.

நேற்றிரவு 10.05 மணியளவில் ஸ்ரீ கெலாம் ஜே,டி.டி. பயிற்சி
மையத்திலிருந்து ஹோண்டா சிட்டி காரில் பந்தாய் லீடோ நோக்கி
சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த இத்தாக்குதல் தொடர்பில் ஷாபிக்
நேற்று போலீசில் புகார் செய்தார்.

தாம் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில்
அடையாளம் தெரியாத இரு ஆடவர்கள் தம்மைப் பின்தொடர்ந்து
வந்ததாகவும் அவர்களில் ஒருவன் சுத்தியலால் காரின் பின்புறக்
கண்ணாடியை உடைத்ததாகவும் அவர் சொன்னார்.

அதிர்ச்சியில் உறைந்த போன நான் காரை உடனடியாக நிறுத்தினேன்.
காரின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்திய அந்த மர்ம ஆசாமிகள்
என்னை அச்சுறுத்தும் விதமாக சுத்தியலைக் காட்டினர். பயந்து போன
நான் காரை பின்னோக்கிச் செலுத்தினேன் என அவர் கூறினார்.

பின்னர் அந்த ஆடவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இத்தாக்குதலில்
தனது காரின் பின்புறக் கண்ணாடி சேதமடைந்தது என்று இச்சம்பவம்
தொடர்பில் போலீசில் புகார் செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
தெரிவித்தார்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் தாங்கள் குற்றவியல் சட்டத்தின்
427வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தி வருவதாகக் கூறிய போலீசார்,
சந்தேக நபர்களை தாங்கள் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.

சிலாங்கூர் எஃப்.சி. குழுவின் முன்னணி விளையாட்டாளரான ஃபைசால்
ஹலிம் கடந்த வாரம் எரித் திராவக தாக்குதலுக்கு இலக்கானார். அவர் இப்போது பெட்டாலிங் ஜெயாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இச்சம்பவம் நிகழ்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் கோல திரங்கானுவிலுள்ள தேசிய விளையாட்டாளரான அக்யார் அப்துல் ரஷிட் வீட்டில் நிகழ்ந்த கொள்ளை முயற்சியின் போது அவர் தலையிலும் கால்களிலும் தாக்கப்பட்டார்.


Pengarang :