NATIONAL

துருக்கிய போர் விமானத் தயாரிப்பில் பங்கேற்க மலேசியாவுக்கு அழைப்பு

கோலாலம்பூர், மே 8- துருக்கியின் ஐந்தாம் தலைமுறை தயாரிப்பான
‘கான்‘ போர் விமானத் திட்டத்தில் கூட்டு பங்காளியாகச் செயல்பட
அந்நாடு மலேசியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ‘கான்‘ போர்
விமானம் கடந்த பிப்ரவரி மாதம் மலேசியாவுக்குத் தனது முதல்
பயணத்தை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் வாயிலாக இரு தரப்பும் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு
ஏற்படும் என்று துருக்கியின் துணை தற்காப்பு அமைச்சர் டாக்டர் செலல்
சாமி தவுபிக் கூறினார்.

இந்த பங்காளித்துவம் இராணுவ ரீதியாக ஆற்றலை அதிகரிப்பதற்கு
மட்டுமின்றி நவீன போர் விமானங்கள் தொடர்பான தொழில்நுட்பத்தை
கற்றுக் கொள்வதற்குரிய வாய்ப்பினையும் வழங்கும் என்று அவர்
சொன்னார்.

‘கான்‘ போர் விமானத் திட்டத்தில் கூட்டு பங்காளியாக ஆவது
மலேசியாவுக்கு மிகவும் பயனளிக்கும். ‘கான்‘ ஐந்தாவது தலைமுறை
போர் விமானம் என்பதோடு இதுவொரு மிகப்பெரிய திட்டமாகும்.

இத்திட்டத்தில் கூட்டு பங்காளியாகச் செயல்பட மலேசியா விருப்பம்
தெரிவித்தால் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைவோம் என அவர்
குறிப்பிட்டார்.

இன்று இங்கு நடைபெறும் 2024 ஆசிய தற்காப்பு சேவை மற்றும் தேசிய
பாதுகாப்பு கண்காட்சியின் போது பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில்
அவர் இவ்வாறு சொன்னார்.

இந்த போர் விமானம் கடந்த 6ஆம் தேதி வெற்றிகரமாக இரண்டாவது
முறையாக இங்கு தரையிறங்கியதாக கூறிய அவர், இந்த விமானத்தை
தரம் உயர்த்தும் பணிகளில் துருக்கிய வான் போக்குவரத்து தொழிலியல்
நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றார்.

இந்த ‘கான்‘ போர் விமானம் துருக்கியின் சொந்த தயாரிப்பாகும்.
ஆகாயப்படையின் ஆற்றலை வலுப்படுத்தும் அந்நாட்டின் முயற்சிக்குக்
கிடைத்த வெற்றியாகவும் வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை தவிர்க்கும்
விதமாக இந்த விமானத் தயாரிப்பு அமைந்துள்ளது.


Pengarang :