ECONOMYMEDIA STATEMENT

பிறப்பை மறைத்து குழந்தையின் கருவை புதைத்த மெக்கானிக் கைது

சிப்பாங், மே 25 –  தனது காதலியின் வயிற்றில் வளர்ந்த  கருவை பூச்சோங்கில் உள்ள ஏரிக்கு அருகே புதைத்ததன்  மூலம் குழந்தைப் பிறப்பை மறைக்க முயன்ற மெக்கானிக் ஒருவர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

கருச்சிதைவு ஏற்பட்டதன் காரணமாக  19 வயது  பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது தொடர்பில் மருத்துவமனையிடமிருந்து கடந்த 15ஆம் தேதி புகார் கிடைத்தைத் தொடர்ந்து  அந்த  21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜி. ஷான் கோபால் கூறினார்.

தனது காதலன் கொடுத்த மாத்திரைகளை உட்கொண்டதால் அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையின் கரு தாமான் தாசேக் பூச்சோங் பகுதியில் புதைக்கப்பட்டது என அவர் சொன்னார்.

புகார் கிடைத்த   சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு இரவு 7.30 மணியளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என  என்று ஷான் கோபால் கூறினார்.  அந்த நபர் கருவை புதைக்கப் பயன்படுத்திய மண்வெட்டியும் கைப்பற்றப்பட்டதாக அவர் சொன்னார்.

சந்தேக நபர் வரும்  மே 26 வரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளதாகவும் பிறப்பை மறைத்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 318 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப் படுவோருக்கு  அதிகபட்சமாக இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார் .


Pengarang :