தோக்கியோ, மே 25 – ஜப்பானுடனான மலேசியாவின் வர்த்தகம் குறிப்பாக செமிகண்டக்டர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் முதளீடுகள் இவ்வாண்டு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுவதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருல் அப்துல் அஜிஸ் கூறினார்.
கடந்தாண்டு, ஜப்பானுடனான வர்த்தகம் சுமார் 3,500 கோடி வெள்ளியாக இருந்தது. இதில் மூன்றில் ஒரு பங்கு திரவமய இயற்கை எரிவாயுவை உள்ளடக்கியிருந்தது என்று அவர் மலேசிய செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசியா ஜப்பானுக்கு பாதுகாக்கப்பட்ட எரிசக்தியை வழங்கி வருவதாகவும் இப்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீது கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜப்பான் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக மலேசியாவின் நான்காவது பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது.
கடந்த மே 22 முதல் 24 வரை பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போதுஜப்பானிய நிறுவனங்களுடன் நடத்திய சந்திப்புகளின் மூலம் மலேசியா 145 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீடுகள் மற்றும் 55 கோடி வெள்ளி மதிப்பிலான ஏற்றுமதி வாய்ப்புகளைப் பெற்றது.
மலேசியாவில் ஏற்கனவே உள்ள ஆறு நிறுவனங்களும் நாட்டில் புதிதாக முதலீடு செய்ய விரும்பும் ஒரு நிறுவனமும் இந்த சந்திப்புகளில் ஈடுபட்டன.
மலேசியாவில் முதலீடு செய்யத் திட்டமிடும் நிறுவனங்களில் ஒன்று செமிகண்டக்டர் தொழில் தொழிலைச் சேர்ந்தது என்று கூறிய தெங்கு ஸப்ருல், உரிய அனுமதி கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் அறிவிக்கப்படும் என்றார்.
மற்ற நிறுவனங்கள் மலேசியாவில், குறிப்பாக சபா மற்றும் சரவாக்கில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் புதிய முதலீடுகளைச் செய்வதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தின என்றார் அவர்.