கோலாலம்பூர், மே 28- பெட்டாலிங் ஜெயாவில் உள்ள விளையாட்டரங்கு ஒன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பத்திற்கு காரணமான கால்பந்து ரசிகர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விளையாட்டரங்கில் இருக்கைகளுக்கு செல்லும் வழியில் உள்ள இரும்பு வேலியின் கதவுகள் உடைபடுவதற்கு காரணமான இந்த களேபரம் தொடர்பான காட்சிகளைச் சித்தரிக்கும் இரு காணொளிகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் எம். ஹூசேன் சோலேஹூடின் ஜூல்கிப்ளி கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 427வது பிரிவு மற்றும் தொலைத் தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், சந்தேக நபர்களைத் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 03-79662222 என்ற எண்களில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கை அறையைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.