ஷா ஆலம், ஜூன் 4- இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் நாடு முழுவதும் மரம் விழுந்தது தொடர்பில் 1,085 சம்பவங்களை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பதிவு செய்தது.
கனத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக கடந்த ஜனவரி தொடங்கி நிகழ்ந்து வரும் இத்தகைய சம்பவங்களால் உயிர்ப்பலியும் பொருட்சேதமும் ஏற்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது கூறினார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நிகழ்ந்த இத்தகைய எதிர்பாராத பேரிடர்கள் காரணமாக பதினைந்து பேர் காயங்களுக்குள்ளான வேளையில் நால்வர் உயிரிழந்தனர் என்று அவர் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்களின் போது காயமுற்ற 15 பேரை தீயணைப்புப் படையினர் வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளனர் என்ற டத்தோ நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
இக்காலக்கட்டத்தில் சிலாங்கூரில் மிக அதிகமாக அதாவது 210 மரம் விழும் சம்பவங்கள் பதிவான வேளையில் அதற்கு அடுத்த நிலையில் 169 சம்பவங்களுடன் பேராக்கும் 118 சம்பவங்களுடன் சரவா மாநிலமும் உள்ளன.