கோலாலம்பூர், மே 8- ஜாலான் செராஸ் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி மலேசிய நெடுஞ்சாலை வாரியம் மற்றும் செத்தியாவங்சா- பந்தாய் விரைவுச் சாலையின் (எஸ்.பி.இ.) பராமரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரின் குறிப்பாக சாலையைப் பயன்படுத்துவோரின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தனது எக்ஸ் பதிவில் கூறினார்.
அந்த மேம்பாலத்தில் விரிசல்கள் தொடர்ந்து விரிவடைந்து வருவதை சுட்டிக்காட்டும் எக்ஸ் தள பதிவு ஒன்றுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை நான் கடுமையாகக் கருதுகிறேன் என்று அவர் மேலும் சொன்னார்.
ஏழு அடுக்குச் சாலை சந்திப்புகளைக் கொண்ட இரு தடங்களுடன் கூடிய இந்த இரு வழி நெடுஞ்சாலை கடந்தாண்டு நவம்பர் 3ஆம் தேதி முழுமையாகத் திறக்கப்பட்டது.
இந்த நெடுஞ்சாலை ஸ்ப்ரிண்ட் நெடுஞ்சாலை, அம்பாங்- கோலாலம்பூர் அடுக்குச் சாலை, டூத்தா- உலு கிளாங் நெடுஞ்சாலை, கோலாலம்பூர் மத்திய சுற்றுச் சாலை 2 ஆகிய நெடுஞ்சாலைகளை இணைக்கிறது.