பெட்டாலிங் ஜெயா, ஜூலை 16 – அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 50,000 கோடி வெள்ளி பங்களிப்பை வழங்குவதை சிலாங்கூர் இலக்காகக் கொண்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகாலப் பயணத்தில் இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனம் அடைநாத சாதனைகள் குறித்து தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, எனினும், அரசின் இந்த சாதனைகள் குறித்து நாம் மெத்தனமாக இருந்து விட முடியாது என்றார்.
தலைமை செயல் அதிகாரி டத்தோ ஹசான் அஸ்ஹாரி தலைமையிலான இன்வெஸ்ட் சிலாங்கூர் குழு சிலாங்கூரில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளதாக நான் நம்புகிறேன்.
ஆனால் கடந்தகால வெற்றிகள் கொண்டாடுவதற்கு நாம் சிறிது நேரத்தை ஒதுக்க முடியும். ஆனால், அது எதிர்கால வெற்றிக்கு எந்த வகையிலும் உத்தரவாதம் அளிக்காது.
நாம் சிலாங்கூரின் எல்லைகளுக்கு அப்பாலும் நோக்க வேண்டிய முக்கிய காரணம் இதுதான். 40,000 கோடி வெள்ளி பொருளாதாரத்தில் முழுமையாக திருப்தி அடையாமல் வரவிருக்கும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 50,000 கோடி வெள்ளி பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று அவர் அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள ஷெரட்டான் ஹோட்டலில் நேற்றிரவு நடைபெற்ற இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனத்தின் வெள்ளி விழா விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.
சிலாங்கூர் கடந்தாண்டு தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40,610 கோடி வெள்ளி பங்களிப்பை வழங்கி சாதனை படைத்துள்ளதாக புள்ளவிபரத் துறை முன்னதாக தெரிவித்திருந்தது. அதோடு மட்டுமின்றி 3.6 சதவீத தேசிய பொருளாதார வளர்ச்சியைத் தாண்டி 5.4 விழுக்காட்டு வளர்ச்சியை இம்மாநிலம் பதிவு செயதது.
எவ்வாறாயினும், வெற்றியை அடைவதற்கு ஏதுவாக உள்ளூர் தேவைகளை பூர்த்தி செயயும் வகையிலும் தென்கிழக்காசியா மற்றும் பரந்த ஆசிய பிராந்தியத்தின் விரிவாக்கத்திற்கான ஒரு கேந்திர முக்கியத்தும் வாய்ந்த தளமாக விளங்கும் வகையிலும் மாநிலம் அதன் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்று அமிருடின் கூறினார்.