ஷா ஆலம், ஆக 5- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 143 பேர் உலு சிலாங்கூர், கம்போங் சுங்கை செக்கோலா பல்நோக்கு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் நேற்று மாலை பெய்த கனமழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உலு பெர்ணம் வட்டாரத்தின் ஆறு கிராமங்களைச் சேர்ந்தவர்களாவர் என்று சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை 5.50 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாகக் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குனரான அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
கம்போங் சுங்கை செலிசிக், கம்போங் செரிகாலா மற்றும் கம்போங் சுங்கை நீலாம் ஆகிய பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கம்போங் செகோலா, கம்போங் மஸ்ஜிட் மற்றும் கம்போங் பாயா லெபார் ஆகியவை 0.3 மீட்டர் நீரில் மூழ்கியுள்ளன என்று அவர் சொன்னார்.