ஷா ஆலம், டிச.24-
சுங்கை செமினியில் ஏற்பட்ட துர்நாற்ற தூய்மைக்கேட்டைத் தொடர்ந்து தடைப்பட்ட குடிநீர் விநியோகம் இன்று அதிகாலை 1 மணி தொடங்கி கட்டம் கட்டமாக சீரடைந்து வருகிறது. அடுத்த 72 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பும்.
சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகாமையில் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடி நீர் விநியோகம் இன்று காலையில் சீரடைந்துவிட்டது என்று ஆயர் சிலாங்கூர் நிர்வாகம் தெரிவித்தது.
“முக்கிய குளம் உட்பட அனைத்து குளங்களில் நீர் குழாய் அழுத்தம் சீராக இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஆயர் சிலாங்கூர் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பயனீட்டாளர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளின் பூகோல அடிப்படையில் தண்ணீர் விநியோகம் கட்டம் கட்டமாக சீரடையும்” என்று அது கூறியது.
எனினும், புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு ஆலையில் துர்நாற்றம் இன்னும் நீடிப்பதால், அது இன்னும் செயல்படத் தொடங்கவில்லை. பாதிப்புற்ற பகுதி மக்களுக்கு நீர் டாங்கி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும் அவ்வறிக்கை தெரிவித்தது.
இதனிடையே, நீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் நீர் தேக்க குளங்களில் உள்ள தண்ணீரின் தரம் மற்றும் துர்நாற்றம் இன்றி இருப்பதை தேசிய நீர் சேவை ஆணையம் (ஸ்பான்) சோதனைகளும் மேற்பார்வை நடவடிக்கைகளும் உறுதி செய்துள்ளன என்றும் அது கூறியது.