ஷா ஆலம், ஜன.22-
2022 சுக்மா போட்டிக்கான உபசரிப்பு மாநிலமாக சிலாங்கூர் தேர்வு பெறுமா என்பது பிப்ரவரி மாத இறுதியில் தெரிய வரும் என்று விளையாட்டுத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓஸ்மான் கூறினார். ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கான இடங்களை மாநில விளையாட்டு மன்றம் பார்வையிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
நீச்சல், திடல் தடப் போட்டி, குறி சுடுதல் மற்றும் அம்பு எய்தல் போன்ற போட்டிகளில் சிலாங்கூர் குழு தங்கப் பதக்கங்கள் பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் புத்ராஜெயாவில் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் சயிட் சிடேக் தலைமையில் நடைபெற்ற சுக்மா உச்சமன்ற கூட்டத்தில் இந்தப் போட்டியை சிலாங்கூர் மாநிலம் ஏற்று நடத்துவதற்கு சில மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது என அவர் தெரிவித்தார்.
உபசரிப்பு மாநிலமாகத் தேர்வு பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர் கூறினார். ஆகக் கடைசியாக 1998ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலம் இந்த விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.