ஷா ஆலம், மார்ச் 16-
கொல்லை புற அரசாங்கம் அல்லது அதிகார அபகரிப்பு என்பதாக மத்திய அரசாங்கத்தை குறை கூறுவதை நிறுத்த வேண்டும் என்று சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா கேட்டுக் கொண்டார்.
“தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு சட்டத்திற்கு உட்பட்டு புதிய அரசாங்கத்தை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்- முஸ்தாஃபா பிலால் ஷா அவர்கள் நியமனம் செய்துள்ள வேளையில் இவ்வாறு குறை கூறுவது தவறாகும்” என்று தமதுரையில் சுல்தான் ஷராஃபுடின் குறிப்பிட்டார்.
அன்மைய அதிகார மாற்றம் காரணமாக மத்திய அரசாங்கம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இருந்து தேசிய கூட்டணிக்கு மாறியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். மாட்சிமை தங்கிய மாமன்னர் மிகவும் கவனத்துடன் கூட்டரசு சட்டமைப்புக்கு ஏற்ப அதிகார மாற்ற நியமனத்தை மேற்கொண்டதை தாம் நேரடியாக பார்வையிட்டதாக சிலாங்கூர் 14ஆவது சட்டமன்ற கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் சிலாங்கூர் ஆட்சியாளர் தெரிவித்தார்.
அரசியல் கருத்து வேற்றுமை காரணமாக மாநில மக்களின் சமூக பொருளாதாரம் பாதிக்காத வகையில் மத்திய – மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடரும் என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.