ஷா ஆலம், ஏப்.8-
அமலில் இருக்கும் நடமாட்ட கட்டுப்பாடு ஆணை நீட்டிக்கப்படுமேயானால் அதை எதிர்கொள்ள சிலாங்கூர் அரசாங்கம் முன்னேற்பாடு சிலவற்றை மேற்கொண்டு வருவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
அவற்றுள்ள மக்களுக்கு தேவையான போதிய உணவு பொருட்கள் கையிருப்பும் அடங்கும். ஆயினும், இவையாவும் கோவிட்-19 சூழ்நிலையைப் பொறுத்தே அமையும் என்றார் அவர்.
“நியாயமான நடவடிக்கைகள் தொடர்வதே சிறப்பாகும். அரசாங்கம் ‘முழுமையான கட்டுப்பாட்டை’ அறிவிக்கலாம். ஆனால், அதைத் தொடர்ந்து ‘முழுமையான பொறுப்புணர்வு’ ஏற்படுவது அவசியமாகும்” என்று வீடியோ மூலம் பெர்னாமா வானொலிக்கு அளித்த பேட்டியில் அமிருடின் கூறினார்.இந்த நடமாட்ட கட்டுபாடு கால கட்டத்தில் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவாலாக இருப்பது ஆணையைப் பின் பற்ற மறுக்கும் பிடிவாதக் காரர்களின் போக்காகும் என்றார் அவர்.
“புதியவை ஒன்று அமல்படுத்தப்படும் போது அவற்றுக்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்வது அவசியமாகும்” என்றார்.