ஷா ஆலம், அக் 1- சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு உதவும் வகையில் புரொடாக் எனப்படும் மனித வள நிர்வாக இலக்கவியல் திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசு அறிமுகம் செய்கிறது. கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவத்திற்கு பிறகு வர்த்தகத்தில் போட்டியிடும் ஆற்றலை வலுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இந்த திட்டத்தின் வாயிலாக சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் நிர்வாகம், உற்பத்தி உள்ளிட்ட வர்த்தகத்தின் அனைத்து பிரிவுகளிலும் இலக்கவியல் முறையை பயன்படுத்துவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் சொன்னார். வர்த்தக நடவடிக்கைகளில் 4.0 தொழில் துறை தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது அதிக செலவினத்தை ஏற்படுத்துவதால் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் இலக்கவியலுக்கு மாறுவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக சிலாங்கூர் அரசு புரொடாக் திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதன் வழி சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் இலக்கவியலுக்கு மாற முடியும் என்றார் அவர்.