கோலாலம்பூர், அக் 25- சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம் மற்றும் புத்ரா ஜெயாவில் அமலாக்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பதா அல்லது இல்லையா என்பதை சுகாதார அமைச்சின் ஆய்வுக்குப் பின்னரே மத்திய அரசு தீர்மானிக்கும்.
சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம் மற்றும் புத்ரா ஜெயாவில் கோவிட்-19 நிலவரம் குறித்து சுகாதார அமைச்சு ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்து வரும் என தாம் நம்புவதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
அந்த ஆய்வின் முடிவின் அடிப்படையில் சுகாதார அமைச்சு அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் எடுத்துரைக்கும் என்றார் அவர்.
பொதுமக்கள் குறிப்பாக நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட இடங்களில் வசிப்பவர்கள் அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டார்.
நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை தொடர்வதா என்பது குறித்து குறைந்தது ஒரு தினத்திற்கு முன்னர் நாங்கள் அறிவித்து விடுவோம் எனவும் அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்ப் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து சிலாங்கூர், கோலாலம்பூர் மற்று புத்ரா ஜெயாவில் கடந்த 14ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடமாட்டக்க கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்டது.