ஷா ஆலம், நவ 4- நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக
பாதிக்கப்பட்ட வியாபாரிகள் ஹிஜ்ரா எனப்படும் சிலாங்கூர் ஹிஜ்ரா வாரியத்தில் பெற்ற
கடனைத் திரும்பச் செலுத்துவது தொடர்பான அட்டவணையை மறு சீரமைப்பு செய்யலாம்.
மோரட்டோரியம் எனப்படும் கடனை காலம் தாழ்த்தி திரும்பச் செலுத்தும் ஏற்பாட்டை
மாநில அரசு தொடராத நிலையில் கடன் தொகையை செலுத்தும் காலத்தை ஐந்தாண்டுகள் வரை நீட்டிக்க ஹிஜ்ரா பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
கடனைத் திரும்பச் செலுத்துவதை அடுத்தாண்டு மார்ச் அல்லது ஜூன் மாதம் வரை ஒத்தி
வைக்க அரசிடம் தற்போதைக்கு திட்டம் இல்லை. ஆகவே, பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு
உதவும் வகையில் கடனைத் திரும்பச் செலுத்தும் முறையை மாற்றியமைக்கும்
ஏற்பாட்டை செய்துள்ளோம் என்றார் அவர்.
நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தின் போது சில
வணிகர்கள் பல மடங்கு லாபம் சம்பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், எனினும், இந்த
கடன் தளர்வு பொது முடக்கத்தால் உண்மையிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே
பொருந்தும் என்றார்.
மாநில சட்டமன்றத்தில் விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் ரோட்சியா
இதனைக் குறிப்பிட்டார்.
மாநில அரசு அமல்படுத்திய கடனை காலம் தாழ்த்தி திரும்பச் செலுத்தும் ஏற்பாடு 7
கோடி வெள்ளி கடன் தொகையை உட்படுத்தியிருந்ததாக பத்து தீகா சட்டமன்ற
உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
அந்த தொகையில் 35 லட்சம் வெள்ளி பொது முடக்க காலத்தில் வசூலிக்க முடியாமல்
போனதாகவும் அவர் சொன்னார்.