கோலாலம்பூர், நவ 10- அண்மையில் அறிவிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜாசா எனப்படும் சிறப்பு விவகாரத் துறைக்கும் பி.இ.கே.டி. எனப்படும் உள்ளூர் சமூக அமைப்புக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை ரத்து செய்யும்படி எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கியுள்ள இக்காலக்கட்டத்தில் மக்களின் நலன் மற்றும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நிதியமைச்சர் மீது நான் அனுதாபம் கொள்கிறேன். அவர் அரசியல்வாதி அல்ல என்பதால் இத்திட்டத்தை முன்வைத்திருக்கிறார். முன்களப் பணியாளர்களுக்காக அனுதாபம் கொள்வதாக அரசாங்கம் கூறிக் கொள்கிறது. ஆனால், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்காக இழிவான பிரசார நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்கிறது என்றார் அவர்.
2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ‘ஜாசா‘வுக்கு 8 கோடியே 85 லட்சம் வெள்ளியும் பி.இ.கே.டி.க்கு 86 லட்சம் வெள்ளியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.