கிள்ளான், நவ 18- செந்தோசா தொகுதியில் உள்ள ஜாலான் கெபுன் நெனாஸ் பகுதியில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட குப்பைகள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் குணராஜ் முயற்சியில் அகற்றப்பட்டன.
கிள்ளான் நகராண்மைக்கழகம் மற்றும் மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பொறுப்பை ஏற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் பெர்ஹாட் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் 30 குப்பை சேகரிப்பு கலங்களும் 5 மண்வாரி இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.
வீட்டுத் தளவாடப் பொருள்கள், வெட்டப்பட்ட புற்கள், பயன்படுத்தப்படாத கட்டுமானப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் இங்கிருந்து அகற்றப்பட்டன. இந்த குப்பைகளை சுற்றுவட்டார குடியிருப்பாளர்களும் குத்தகையாளர்களும் இங்கு கொட்டியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு குப்பைகளை கண்ட இடங்களில் வீச வேண்டாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் குணராஜ் கேட்டுக் கொண்டார்.
சுற்றுப்புறத்தையும் சுகாதாரத்தையும் பாதுகாப்பது நமது அனைவரின் பொறுப்பாகும் என்றும் அவர் நினைவுபடுத்தினார்.
குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவோர் பற்றிய தகவல்களை குறிப்பாக லோரிகளின் பதிவு எண்கள் மற்றும் புகைப்படங்களை பொதுமக்கள் எங்களிடம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க இயலும் என்றார் அவர்.