ஷா ஆலம், நவ 20- கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் எஸ்.ஒ.பி எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 நோய்த் தடுப்பு பணிக் குழு வலியுறுத்தியுள்ளது. சிலாங்கூர் மாநிலம் நேற்று மிக அதிகமாக அதாவது 407 கோவிட்-19 சம்பவங்களை பதிவு செய்தது. தெராத்தாய் தொற்று மையம் வாயிலாக 245 சம்பவங்களும் காப்பாஸ் பிஜே தொற்று மையம் மூலம் 55 சம்பவங்களும் பதிவாகின. நடப்பில் உள்ள தொற்று மையங்கள் மூலம் 361 சம்பவங்களும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 19 சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டதாக அந்த பணிக் குழு தெரிவித்துள்ளது. இந்நோய்த் தொற்றைத் தடுக்க பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்ட செயலாக்க நடைமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது. நேற்று நாடு முழுவதும் 1,290 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் 1,067 சம்பவங்கள் சபா மற்றும் சிலாங்கூரில் கண்டு பிடிக்கப் பட்டன.