ஷா ஆலம், டிச 3- மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்தின் கீழ் வரும் 2021ஆம் ஆண்டு தவணையில் பள்ளி செல்லும் சுமார் 6,000 மாணவர்களுக்கு பாயா ஜெராஸ் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் பள்ளி உபகரணங்கள் வழங்கப்படும்.
சுமார் ஆறு லட்சம் வெள்ளி செலவிலான இத்திட்டம் பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை இலக்காக கொண்டு அமல்படுத்தப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
தொடக்கக்கட்டமாக மூவாயிரம் மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்படும் எனக் கூறிய அவர், எஞ்சிய மாணவர்கள் அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்த உபகரணங்களைப் பெறுவர் என்றார்.
கடந்த நவம்பர் மாதம் வரை 350 மாணவர்கள் புத்தகப் பைகள் மற்றும் பள்ளிச் சீருடைகளை பெற்றுள்ளனர். இந்த உதவிப் பொருள்களைப் பெற விரும்புவோர் இம்மாத இறுதிக்குள்ள விண்ணப்பம் செய்யலாம் என்றார் அவர்.
எனது அலுவலகம் வாயிலாக இந்த விண்ணப்பத்தை செய்யலாம். வேலை இழந்த பெற்றோர்கள் மற்றும் பள்ளி செல்லும் பிள்ளைகளைக் கொண்ட தனித்து வாழும் தாய்மார்கள் ஆகியோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.