கோலாலம்பூர் டிச 10;- நாட்டில் ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகங்களையும் எதிர்த்துப் போராடுவதில் உண்மை நேர்மை இருக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான அணுகு முறைகள் அனைத்துக் கட்சிகளிடமும் ஒரே சீராக இருந்தால் அன்றி, நாடு ஊழலை எதிர்த்து வெற்றிபெற முடியாது, அதுவரை ஊழல் ஒழிப்பு என்பது இந்நாட்டில் வெறும் உதட்டளவில் மட்டுமே இருக்கும் என்றார் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் கெஅடிலான் கட்சியின் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஒவ்வொரு இயக்கமும் அதன் அடிப்படை கொள்கை யாகக் கொண்டு, செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட நல்ல பழக்கங்கள் அதிகாரத்தின் உச்ச மட்டத்தில் உள்ளவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும், ஏனெனில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்கு நேர்மை மற்றும் வலிமை தேவைப் படுகிறது. ஒவ்வொரு இயக்கமும் அந்தச் சீர்திருத்த இலக்கை அடைவதை மட்டுமே அடிப்படை கொள்கையாக கொண்டிருக்க வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்,
ஒவ்வொரு இயக்கமும் அதன் நிர்வாகிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் செல்வாக்கிலிருந்து விடுபட உத்தரவாதம் தேவை படுகிறது. மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களில் ஓட்டைபோடுவது, அல்லது உதவிதிட்டங்களில் கைவைப்பது, கசிவுகளை ஏற்படுவதைத் தடுக்க இயக்கச் சீர்திருத்தம் முக்கியமானது, என்று 2020 சர்வதேச ஊழல் தடுப்பு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஊழல் குறித்த நாட்டின் அணுகுமுறையைச் சரிசெய்து கண்ணியத்துடனும் நேர்மையுடனும் இத் தேசத்தை வளர்க்க அனைத்து மலேசியர்களுக்கும் அன்வார் அழைப்பு விடுத்தார்.
இப்போது , ஊழலை எதிர்த்துப் போராடவும்,மலேசியாவை கட்டொழுங்குடன் வலுவான ஜனநாயகப் பாதையில் கொண்டு செல்ல நாம் அனைவரும் இன்னும் அதிகம் அர்ப்பணிக்க முன் வர வேண்டும் என்றார் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.