ஷா ஆலம், ஜன 5- சிலாங்கூர், பேராக், பகாங், திரங்கானு ஆகிய மாநிலங்களில் வெள்ள அகதிகளின் எண்ணிக்கை இன்று காலை அதிகரித்தது. எனினும் கிளந்தான் மற்றும் ஜோகூரில் அந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
பேராக் மாநிலத்தில், நேற்று மாலை வரை 1,011ஆக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 1,237ஆக உயர்ந்தது. நான்கு மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் அனைவரும் 13 துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முவாலிம் மாவட்டத்தில் உள்ள கம்போங் சிலிம் வில்லேஜ், கம்போங் பெலுன், கம்போங் கோல சிலம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 13,626ஆக இருந்த வேளையில் இன்று காலை அந்த எண்ணிக்கை 17,104ஆக உயர்வு கண்டது. பத்து மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள் 242 நிவாரண மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
லிப்பிஸ், ஜெராண்டூட், ரவுப், ரொம்பின், பெந்தோங், பெக்கான், பெரா, தெமர்லோ, குவந்தான், மாரான் ஆகியவை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும்.
திரங்கானுவில் நேற்று 1044ஆக இருந்த வெள்ள அகதிகளின் எண்ணிக்கை இன்று காலை 1074ஆக உயர்வு கண்டது.
சிலாங்கூரைப் பொறுத்த வரை இன்று காலை வரை இரு மாவட்டங்களைச் சேர்ந்த 183 பேர் நான்கு நிவாரண மையங்களில் இன்னும் தங்கியுள்ளனர்.
உலு பெர்ணம் மாவட்டத்தைச் சேர்ந்த 128 பேர் மூன்று துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வேளையில் கோல சிலாங்கூர் வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட 55 பேர் ரந்தாவ் பாஞ்சாங் தேசிய பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.