ஷா ஆலம், ஜன 8- செராஸ், தாமான் சுங்கை செரிங்கில் குழாய் உடைந்த காரணத்தால் இன்று பிற்பகல் 1.00 மணி தொடங்கி பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் கோலாலம்பூரை உட்படுத்திய 121 இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இடத்தில் பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
இம்மாதம் 2ஆம் தேதியன்று இப்பகுதியில் கழிவு நீர்க் குழாய்களை பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்ட போது குடிநீர்க் குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
பழுதுபார்ப்புப் பணிகள் நாளை 9ஆம் தேதி அதிகாலை 3.00 மணியளவில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழுதுபார்ப்புப் பணிகள் முடிவுக்கு வந்தவுடன் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வர்த்தக மற்றும் தொடர்புப் பிரிவுத் தலைவர் எலினா பாசேரி கூறினார்.
போதுமான அளவு நீரை சேகரித்து வைத்துக் கொள்வதோடு விவேகமான முறையில் நீரைப் பயன்படுத்தும்படி அவர் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறினார்.
நீர் விநியோகத் தடை தொடர்பான தகவல்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.