ஷா ஆலம், பிப் 10– ஊராட்சி மன்ற லைசென்ஸ் உள்ள வர்த்தகர்கள் ‘நாடி‘ எனப்படும் ஸ்கிம் நியாகா டாருள் ஏசான் கடனுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.
அனைத்து விதமான வியாபாரங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம் எனக் கூறிய அவர், விண்ணப்பதாரர் ஊராட்சி மன்ற வர்த்தக லைசென்ஸ் உள்ளவராக இருக்க வேண்டும் என்பதோடு 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவராகவும் சிலாங்கூரை வசிப்பிடமாக கொண்டவராகவும் இருத்தல் அவசியம் என்றார்.
மக்களுக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் அரசினால் மேற்கொள்ளப்படும் திட்டம் இதுவாகும். இக்கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் http://www.hijrahselangor.com என்ற அகப்பக்கத்தின் வாயிலாக முழு விபரங்களைப் பெறலாம் அல்லது அருகிலுள்ள ஹிஜ்ரா அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று அவர் மேலும் சொன்னார்.
நாடி மற்றும் கோ டிஜிட்டல் கடனுதவித் திட்டங்களை முகநூல் வாயிலாக தொடக்கி வைத்த போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வியாபாரம் செய்ய விரும்புவோர் அல்லது புதிதாக வியாபாரத்தை தொடக்கியவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆயிரம் வெள்ளி முதல் ஐயாயிரம் வெள்ளி வரை கடனுதவி பெற முடியும்.